விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாரனேரியில் அரசுப் பள்ளி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிய வழக்கில், 'வழக்கறிஞர் கமிஷனர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மாரனேரி கோபிநாத் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், பெண்கள் சுகாதார வளாகம் உள்ளது.
பள்ளி அருகே ஆலங்குளம்--சிவகாசி ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கும், பெண்கள் சுகாதார வளாகத்திற்கும் செல்ல முடியவில்லை. விடுமுறை நாளில் பள்ளி வளாகத்தில் குடிமகன்கள் மது அருந்துகின்றனர். கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் செய்தோம். அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும், நடவடிக்கை இல்லை.
விதிகளுக்கு எதிராக பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அதை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, கோபிநாத் மனு செய்திருந்தார்.நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி அமர்வு விசாரித்தது.டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன்: பள்ளி நுழைவு வாயிலிலிருந்து 120 மீ.,துாரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. 300 மீ.,துாரத்தில் தனியார் பார் உள்ளது. அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு ஆதரவாக மனுதாரர் மனு செய்துள்ளார்.
மனுதாரர் வழக்கறிஞர் மலைக்கனி: பொதுநல நோக்குடன் மனுதாரர், மனு செய்துள்ளார். இதில் உள்நோக்கம் இல்லை. நீதிபதிகள், 'டாஸ்மாக் கடை பள்ளியிலிருந்து எவ்வளவு துாரத்தில் அமைந்துள்ளது? என ஆய்வு செய்ய, வழக்கறிஞர் பகவத்சிங்கை கமிஷனராக நியமிக்கிறோம். அவர், ஆக.,27 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர்.
No comments:
Post a Comment