திருப்பதியில் உள்ள, எஸ்.வி., பல்கலைக் கழக விடுதியில், சிக்னல் ஜாமர் அமைக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில், திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, வெங்கடேஸ்வரா பல்கலை உள்ளது. இங்குள்ள விடுதியில், மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவை கடந்து, பல மணி நேரம் அலைபேசியில் பேசுவதே, தற்கொலைக்கு காரணம் என, விடுதி அதிகாரிகள் அறிந்து, இரவு 9:00 மணிக்கு மேல், மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்தனர்.
அதையும் மீறி, மாணவர்கள் சிலர், அதிகாலை வரை போனில் பேசி வருவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன், மூளை செயல்பாடும் குறைகிறது என, பல்கலை நிர்வாகம் கவலையடைந்தது. இதனால், திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரி, வித்யாநிகேதன் கல்லூரி போன்ற கல்லூரிகளில், இரவு 9:00 மணிக்கு மேல், அலைபேசிகளை இயக்க முடியாத அளவிற்கு, சிக்னல் ஜாமர் என்ற கருவியை பொருத்த, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனினும், இரவு 9:00 மணிக்கு மேல், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, போனில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், விடுதியில் உள்ள, லேண்ட் லைன் போனை பயன்படுத்தி கொள்ளலாம் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment