மனித வாழ்வின் அடிப்படை விஷயங்களில் முக்கியமானது கல்வி. இது அனைவருக்கும் கிடைக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும். நாட்டிலேயே அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு. ஆனால் இதில் பெரும்பகுதி தனியாருக்கு சொந்தமானவை. உயர்க்கல்வியைவிட முக்கியமானது அடிப்படை, தொடக்கக் கல்வியாகும். இதிலும் தனியார் கல்வி நிறுவனங்களே அதிக அளவில் உள்ளன.
அனைவருக்கும் கல்வி கிடைக்க, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டுமானால், அது அரசு கல்வி நிறுவனங்களால் மட்டுமே செய்ய முடியும். அரசுப் பள்ளியில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றாலே தற்போது அது கவுரவ குறைவாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே. அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருந்தால், தனியார் பள்ளிகளுக்கு செல்வதை குறைத்துவிடலாம்.
ஆனால் நடப்பதோ தலைகீழ். அரசுப் பள்ளிகள் கட்டுவதற்கும், சீரமைப்பதற்கும் மத்திய அரசு வழங்கும் நிதியைக் கூட, தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. பள்ளிகள் கட்ட, மாணவிகளுக்கு விடுதி அமைக்க என மாநில அரசுகளுக்கு மத்திய தேசிய இடைநிலை கல்வி இயக்ககம் நிதியுதவி அளித்து வருகிறது. அதன்படி இந்த வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஸீ 4,400 கோடியைத்தான் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணாக்கியுள்ளது.
இது கல்வித் துறையின் மீது அரசுக்கு உள்ள அக்கறையின்மையையே காட்டுகிறது. வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாதது கொடியதிலும் கொடியது. அரசின் அலட்சியத்துக்கு ஏழை எளிய மக்களின் குழந்தைகள் எதிர்காலம் விலையாகிவிடக் கூடாது. இன்றும் கிராமங்களிலும், நகரங்களின் புறநகர் பகுதிகளில் மரத்தடியிலும், பாழடைந்த கட்டிடங்களிலும்தான் பாடம் நடத்தப்படுகிறது.
பின்லாந்து ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு. இன்று உலகெங்கும் உள்ள நாடுகள் பின்லாந்துக்கு படையெடுக்கின்றன. காரணம் அங்குள்ள கல்வி முறைதான். உலகின் மிகச் சிறந்த கல்விமுறை இங்குதான் உள்ளது என்கின்றனர். அதற்கு காரணம் அங்கு கல்வியை அரசு அளிக்கிறது. தனியார் பள்ளிகளே கிடையாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுப் பள்ளியில்தான் கல்வி.
அதுபோன்ற நிலையை இங்கு எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளையாவது அரசு தர வேண்டும். நமது குழந்தைகளின் கல்விக் கண்ணை திறப்பதற்கு அரசு கண் விழிக்க வேண்டும்.
No comments:
Post a Comment