மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஜாக்டோ உயர் மட்டக் குழு உறுப்பினர் இரா.தாஸ் கூறியதாவது: ஆறாவது ஊதியக் குழுவில் தெரிவித்த ஆசிரியர்களுக்கான ஊதியம் இங்கே பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் கடைநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.1200 என்று சம்பளம் வழங்கும்போது, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.610 வழங்கினர்.
அதற்காக ஜாக்டோ என்ற அமைப்பை முன்பு உருவாக்கினோம். அதன் மூலம் பல போராட்டங்கள நடத்திய பிறகு 1.6.88க்கு பிறகு தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1200 பெற்றோம். அடுத்த ஊதியக் குழு 1998ல் கொண்டு வரப்பட்டது. இதன் பரிந்துரைகள் 1.1.96 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் 1998ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதன்படி மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.4500 ஊதியம் கிடைத்தது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 4000 தான் என நிர்ணயம் செய்தனர். இந்த வேறுபாடு குறித்து அரசுக்கு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆசிரியர்களை அழைத்துப் பேசி, ஊதியத்தில் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாதம் ரூ.4500 ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். 2006ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் சம்பளத்தை மாதம் ரூ.5200 என்றும் கிரேடு பே ரூ.2800 என்றும் நிர்ணயித்தனர். அப்போது மத்திய அரசு ஆசிரியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.9300 மற்றும் கிரேடு பே ரூ.4200 பெற்றனர். இந்த வித்தியாசம் குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்தோம். அதை அரசு ஏற்கவில்லை. திரும்பவும் போராட்டம் நடத்தினோம். எல்லா சங்கங்களும் ஒன்று சேர்ந்து ஜாக்டோ-ஜியோ என்ற பெயரில் போராட்டம் நடத்தினோம். அப்போதைய முதல்வர் கருணாநிதி, இந்த பிரச்னையை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்போதைய தொழில் துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்தார்.
ஒரு நபர் குழு சார்பில் 80 துறைகளுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் 40 துறைகளுக்கு ஊதிய உயர்வில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ரூ.750 (றிணீஹ் ஙிணீஸீபீ) மாற்ற முடியாது என்று அரசு கூறியது. மேலும், இடைநிலை ஆசிரியர்கள் 1லட்சத்து 16 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்தால் நிதி நெருக்கடி ஏற்படும் என்று அரசு தெரிவித்தது. அரசு தெரிவித்தபடி அந்த அளவுக்கு இடைநிலை ஆசிரியர்கள் அப்போது இல்லை. ஒய்வு பெறுவோர், காலிப் பணியிடம் என்று கணக்கிட்டால் அப்போது 35000 பேர் தான் இருந்தனர். பதவி உயர்வு பெறுவோர் ஓய்வு பெறுவோர் என்று கணக்கிட்டு பார்த்தால் மாதம் ஒன்றுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.16 கோடி 27 லட்சம் தேவைப்படும்.
அடுத்தடுத்த கட்டத்துக்கு இடைநிலை ஆசிரியர்கள் சென்று விடுவதால் நிதிச்சுமை ஏற்படாது என்றும் அது குறித்து அரசு கவலை கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தோம். பாதிப்பு ஏதும் இல்லை, இது ஒரு வகை மூலதனம் என்றும் தெரிவித்தோம். ஆனால் அப்போதைய அரசு இது குறித்து முடிவு எடுப்பதற்குள் தேர்தல் வந்தது. காணாமல்போன கிருஷ்ணன் குழு: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து உரிய சம்பளத்தை வழங்குவோம் என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்ததும், ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்டகுழு அமைத்தனர். ஆனால் அந்த குழு ஒன்றும் செய்யவில்லை.
பிரித்தாளும் கொள்கை: கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செலவு குறைவு என்றும் நகரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செலவு அதிகம் என்றும் கூறி ஆசிரியர்களின் மனதை நோகடித்தனர். ஊதியம் வழங்குவதை தட்டிக் கழித்தனர். இதனால் மனம் நொந்த ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறோம். அதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 2011ம் ஆண்டு முதல் நடைபயணம், உண்ணா விரதம், ஆர்ப்பாட் டம், மறியல், பேரணிகள், உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் அரசுச் செயலாளரை சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். இதற்கு பிறகும் அரசு பாராமுகமாகவே உள்ளது வேதனையாக உள்ளது
No comments:
Post a Comment