சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்குகின்றன. மார்ச் 2-இல் தொடங்கும் பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. 10-ஆம் வகுப்பில் பள்ளி அளவிலான தேர்வு மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது.
பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர் சுதர்சன ராவ் தெரிவித்தார்.
சென்னை மண்டலத்தில் பிளஸ் 2 தேர்வை 70 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 1.7 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 10-ஆம் வகுப்புத் தேர்வை நிகழாண்டு நாடு முழுவதிலும் 3,537 தேர்வு மையங்களிலிருந்து 13,73,853 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை 3,164 தேர்வு மையங்களிலிருந்து 10,40,368 பேர் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 3.37 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை 1.01 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வுகளைக் கண்காணிக்க சிறப்புப் பார்வையாளர்கள், பறக்கும் படைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கட்டுகள் 4 உதவி கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் பிரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பில் பார்வையற்றோர் 391 பேரும், கற்றலில் குறைபாடுடையவர்கள் 988 பேரும், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் 225 பேரும், உடல் ஊனமுற்றோர் 904 பேரும், மன வளர்ச்சி, அறிவுத் திறன் குறைபாடுடையவர்கள் 147 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் பார்வைற்ற 363 பேர் உள்பட மொத்தம் 2,066 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்காக கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment