”சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு, நாக் கமிட்டி, ’ஏ’ கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது,” என, நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அண்ணாமலை பல்கலையில் முறைகேடுகள், நிதி நெருக்கடி காரணமாக, 2013 முதல், அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதன்பின், நிர்வாக சீரமைப்பு செய்யப்பட்டு, தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு - நாக் கமிட்டி ஆய்விற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், கடந்த நவ., 12ம் தேதி முதல், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சந்திரசேகர் ஷெட்டி தலைமையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், 13 பேர் கொண்ட, நாக் கமிட்டி குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, பல்கலைக் கழக தற்போதைய நிலைகள் குறித்து, நிர்வாகம் சார்பில், நாக் கமிட்டியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. ஆய்விற்கு பின், நாக் கமிட்டி, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு, ’ஏ’ கிரேடு வழங்கியுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகள் வரை, இதே தரம் கடைபிடிக்கப்படும்.
’ஏ’ கிரேடு தரத்தால், மத்திய அரசின் யு.ஜி.சி., மூலம், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி, கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும், 700 பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில், நாக் கமிட்டி ஆய்வு செய்ததில், ’ஏ’ கிரேடு தரத்தில், 42வது ரேங்க்கில் அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளது.
No comments:
Post a Comment