தனியார் பள்ளியில், இறந்த மகன் உடலை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, திருச்சி மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரியிடம், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்பலானத்தம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். என்.எல்.சி.,யில் டெக்னீஷியனாக உள்ளார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ராம்குமார், பெரம்பலூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி, பள்ளி விடுதியில், ராம்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பெற்றோருக்கு தகவல் தெரிவித்த, பள்ளி நிர்வாகம், மாணவன் உடலை போலீஸார் மூலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு வந்த மாணவனின் பெற்றோர், பெரம்பலூர் அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. திருச்சி அரசு மருத்துவமனையில் தான், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, பெரம்பலூர் மாவட்ட, எஸ்.பி., சோனல் சந்த்ராவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று காலை, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, மாணவன் உடலை கொண்டு வந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில், மகன் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, டாக்டர்கள் குழு தலைமையில், வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், என, மாணவரின் பெற்றோர் பிரச்னை கிளப்பினர். இதனால், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., சோனல் சந்த்ரா ஆகியோர் ச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து மாணவனின் தந்தை ராமநாதன் கூறியதாவது,
கடந்த, 20ம் தேதி, ராம்குமார், பள்ளியில் விசில் அடித்துள்ளான். இதை பார்த்த ஆசிரியர் ஒருவர், ராம்குமாரை தனியாக அழைத்துச்சென்று, பிரம்பால் அடித்துள்ளார். அன்று மாலை, ராம்குமார், இது பற்றி தாய் அம்பிகாவிடம் போனில் தெரிவித்தான். கிறிஸ்துமஸ் விடுமுறை வருவதால், அரையாண்டு தேர்வுகளை முடித்து விட்டு வரும்படி, அம்பிகா கூறியுள்ளார்.
இந்நிலையில், 22ம் தேதி காலை, ஹாஸ்டலில் சாப்பிட சென்ற போது, விசில் அடித்ததை சொல்லி, ராம்குமார் தலையில் வார்டன் அடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராம்குமார், தட்டை கீழே போட்டு உள்ளான். அன்று மதியம், விடுதிக்கு அழைத்துச் சென்று வார்டன் மற்றும் ஆசிரியர்கள் அடித்ததில், ராம்குமார் இறந்துள்ளான். இதையடுத்து, 106ம் எண் அறைக்கு கொண்டு போய், ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, ஜோடித்து விட்டனர்.
நாங்கள் பள்ளி விடுதிக்கு சென்ற போது, ராம்குமார் தங்கியிருந்த அறையில் ஒரு பொருளும் இல்லை. உடல் ஜி.ஹெச்.,சில் இருப்பதாக கூறினர். அங்கு சென்ற போது, தனியார் மருத்துவமனையில் பகுதி நேர டாக்டராக உள்ள சரவணன், பிரேத பரிசோதனை செய்வார், என்று தெரிவிக்கப்பட்டது. அதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, எஸ்.பி., சோனல் சந்த்ராவிடம் தெரிவித்தோம். அதனால், ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் உடல் கொண்டு வரப்பட்டது. இங்கும், டாக்டர் சரவணன் தான் பிரேத பரிசோதனை செய்வேன், என்கிறார். மகனை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்ட ஆசிரியர், வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் குழு முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றத்தின் மூலம், இதற்கான நடவடிக்கை மேற்கொள்வோம் இவ்வாறு அவர் கூறினார். மாணவனின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய, எஸ்.பி., ராஜேஸ்வரி, அரசு டாக்டர்கள் குழு முன்னிலையில், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும், அதற்காக மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment