ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது தொடர்பான புகாரை வாங்க மறுத்து, கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுராதா
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் வசிப்பவர் அனுராதா (வயது 35). இவர் மதுராந்தகத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஆசிரியை அனுராதா நேற்று பகல் 1 மணி அளவில், தனது தம்பியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அவர் ஒரு சோக கதையை வருத்தத்துடன் தெரிவித்தார்.
அவருக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது. அதன் ஏ.டி.எம். கார்டும் வைத்துள்ளார். நேற்று முன்தினம் மர்ம ஆசாமி ஒருவன் அனுராதாவிடம், செல்போனில் பேசினான். நான் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பேசுகிறேன், உங்களுக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளதா? என்று கேட்டான். ஆதார் அட்டை இல்லை என்று அனுராதா பதில் அளித்தார். உடனே அந்த ஆசாமி, உங்கள் வங்கி கணக்கில் ரூ.83 ஆயிரம் பணம் இருக்கிறது. ஆதார் அட்டை இல்லாததால், உங்கள் வங்கி கணக்கு காலாவதி ஆகிவிடும், கணக்கை புதுப்பிக்க வேண்டும், அதற்கு ஏற்கனவே உங்கள் பெயரில் உள்ள வங்கி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை சொல்லுங்கள் என்று அந்த ஆசாமி கேட்டான்.
ரூ.43 ஆயிரம் மோசடி
வங்கி கணக்கில் இருந்த தொகைபற்றி சரியான தகவலை சொன்னதால், அனுராதாவும், செல்போனில் பேசியவர் வங்கியில் இருந்துதான் பேசுகிறார் என்று நம்பினார். இதனால் தனது வங்கி ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை சொன்னார். உடனே அந்த ஆசாமி, போன் இணைப்பை துண்டித்துவிட்டான். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அவரது வங்கி ஏ.டி.எம். கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் பணம் ஆன்-லைன் மூலம் சுருட்டப்பட்டுவிட்டது. இதை தெரிந்துகொண்ட அனுராதா கடும் அதிர்ச்சி அடைந்தார். மதுரை அவரது சொந்த ஊராகும். அங்குள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் கணக்கு வைத்திருந்தார். அந்த வங்கிக்கு போன் செய்து, தனது கணக்கில் உள்ள மீதி பணத்தையும், போனில் பேசிய ஆசாமி சுருட்டிவிடாமல் தடுத்து முடக்கி வைத்துவிட்டார்.
புகாரை வாங்க மறுப்பு
ஏற்கனவே பணத்தை இழந்து வேதனையில் இருந்த ஆசிரியை அனுராதாவிற்கு, கேளம்பாக்கம் போலீசார் நடந்து கொண்ட விதம், கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. ஆன்-லைன் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் பணம் சுருட்டப்பட்டது தொடர்பாக, கேளம்போக்கம் போலீசில் புகார் கொடுக்க சென்றார். தனது சோகத்தை சொல்லி, புகார் கொடுத்தார்.
ஆனால் கேளம்பாக்கம் போலீசார் புகாரை வாங்க மறுத்து வங்கி கணக்கு மதுரையில் இருப்பதால், மதுரை சென்று புகார் கொடுங்கள் என்று சொன்னார்கள். புகாரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது, ஐகோர்ட்டும் ஆணை பிறப்பித்துள்ளதாக பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன், நீங்கள் புகாரை வாங்க மறுக்கிறீர்களே, நான் இதற்காக மதுரைக்கு செல்ல வேண்டுமா என்று கண்ணீருடன் கேட்டார். உங்கள் புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார்தான் விசாரிக்கவேண்டும், நாங்கள் விசாரிக்க முடியாது, வேண்டுமானால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுங்கள் என்று, புகாரை வாங்க பிடிவாதமாக மறுத்துவிட்டார்களாம்.
கமிஷனர் அலுவலகத்தில்...
இந்த சோகத்தை சுமந்து கொண்டுதான், அனுராதா நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். ஆனால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், ஆறுதலாக நடந்து கொண்டனர். புகாரை வாங்க மறுக்கவில்லை. இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை, நாளைக்கு வாருங்கள், உங்கள் புகாரை வாங்கி, சைபர் கிரைம் போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கிறோம், என்று ஆறுதலாக சொன்னார்கள்.
அனுராதா சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்காக தனது வங்கி கணக்கின் நம்பரையும், தனது செல்போன் நம்பரையும், கியாஸ் ஏஜெண்டு அலுவலகத்தில் சொன்னேன். அங்கிருந்து எனது வங்கி கணக்கு விவரத்தை தெரிந்துகொண்ட மர்ம நபர் எனது வங்கி கணக்கை ஆன்-லைன் மூலம் ஆராய்ந்து எனது கணக்கில் இருக்கும் பணத்தை தெரிந்து கொண்டு, வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி எனது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை வாங்கி பணத்தை சுருட்டிவிட்டனர்.
சமையல் கியாஸ் ஏஜெண்டு அலுவலக ஊழியர்கள், இந்த பண மோசடியில் உடந்தையாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன் என்று அனுராதா வேதனையுடன் சொன்னார்.
புகார்கொடுப்பதற்காக அனுராதா, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.
No comments:
Post a Comment