வறுமை காரணமாக பள்ளியில் இடைநிற்கும் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், நன்றாக படிக்கும் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவி வழங்கவும், கடந்த, 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்வி தான இயக்கம், இந்த ஆண்டு செயல்படாமல் உள்ளதால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக, மலை பகுதி கிராமங்களில், வறுமை காரணமாக பள்ளியில் இருந்து மாணவர்கள் இடை நிற்றல் அதிகரித்து வந்தது. மேலும், நன்றாக படிக்கும் மாணவர்கள், வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்காக, கடந்த, 2012 ஆண்டு மாவட்டத்தில், கல்வி தான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் என பலதரப்பினரும் இந்த இயக்கத்துக்கு நிதியை வாரி வழங்கினர். இதன்படி, திட்டம் துவங்கிய போது, 15 லட்ச ரூபாய்க்கு மேல் நிதி வந்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம், பல லட்ச ரூபாய் இந்த இயக்கத்துக்கு நன்கொடையாக வந்தது.
இந்த நிதியை கொண்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்டு வறுமையில் வாடும் மாணவர்களை, இனம் கண்டு, அவர்களுக்கு, ஆண்டுக்கு, ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு மாணவர்கள் தங்களின் படிப்புக்கு தேவையான செலவுகளை செய்து கொள்ள முடியும்.
கல்வி தான இயக்கத்துக்கு வந்த நிதி கலெக்டரை தலைவராக கொண்டும், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்டுள்ள அமைப்பின், பெயரில் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம், 2012ம் ஆண்டு, இந்த நிதியின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலன் அடைந்தனர்.
ஆனால், 2013ம் ஆண்டு பள்ளி தொடங்கிய பின்பும், இந்த நிதியை பயன்படுத்தாமல் இருந்தனர். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்ததை தொடர்ந்து ஓரு சில மாணவர்களுக்கு மட்டுமே, இந்த இயக்கம் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், திட்டம் துவங்கி மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த ஆண்டும் கல்வி தான இயக்கத்தில் இருந்து, எந்த மாணவர்களுக்கும் நிதி வழங்கவில்லை. இதனால் எந்த நோக்கத்துக்காக கல்வி தான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மாவட்டத்தில் வறுமையில் வாடும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி தான இயக்கத்தில் இருந்து நிதியை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 2012ம் ஆண்டு கல்வி தான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் அறிந்தேன். கல்வி தான இயக்கத்துக்கு வந்த நிதியை கையாள கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆண்டு வறுமையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வறுமை காரணமாக பள்ளியை விட்டு, நின்ற மாணவ மாணவிகள் குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருவதாக தகவல் வந்தது. கணக்கெடுப்பு முடிந்தவுடன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பரிந்துரை செய்யும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி தான இயக்கத்தில் இருந்து, தலா, ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment