நல்ல மனிதன் என்ற உயரிய பட்டத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பட்டங்கள் பெற்றால் மட்டும் அடைய முடிவதில்லை என சென்னை ஆவின் பாதுகாப்பு முதன்மை கண்காணிப்பு அலுவலர் ரவி பேசினார். விழுப்புரம் அடுத்த லட்சுமிபுரத்தில் வேலா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிகளுக்கான கட்டடம் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
நல்ல மனிதன் என்ற உயரிய பட்டத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பட்டங்கள் பெற்றால் மட்டும் அடைய முடிவதில்லை. நல்ல மனதை படைப்பவன் மட்டுமே, உயர்ந்த மனிதன் என்ற இடத்தை அடைகிறான். நமது சமூகம் பெண்களுக்கு முறையாக மரியாதை கொடுப்பதில்லை. காவல் துறையில் கூட பயிற்சிக்கு வரும் பெண்களை, அதிகாரிகளுக்கு மரியாதை என்ற பெயரில் மட்டம் தட்டி வைக்கின்றனர்.
நாம் சமூகத்தில் ஆண்களுக்கு நிகர் பெண் என பேசினாலும், நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. உண்மையில் பெண்கள்தான் அதிக பலமிக்கவர்கள். ஆண்கள் கோழைகள். பெண்களுக்கு தான் மூளை அதிகமாக வேலை செய்வதாக டாக்டர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கல்வியறிவு பெற்று, நன்றாக படிக்க இரு தலைவர்கள் தான் காரணம். கல்வி கண் திறந்த காமராசர், பெண் கல்வியை வற்புறுத்திய பெரியார். தற்போதுள்ள இளைய சமூகத்திற்கு பெரியார், காந்தி பற்றி அதிகம் தெரியாதவர்களாக உள்ளனர். நீங்கள் எல்லாம் மறைந்த தலைவர்கள் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றாக படித்தால் தான் நமது வாழ்க்கையை சிறந்த முறையில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கு முதலில் நீங்கள், உங்களின் மன நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குரிய பிரச்னைகளுக்கு நீங்கள் மனநிலை மற்றும் அறிவியல் ரீதியாக தீர்வு கண்டால் தான், நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு ரவி ஐ.பி.எஸ்., பேசினார்.
No comments:
Post a Comment