"கேள்வி கேட்கும் மாணவர்களை புறக்கணிக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்" என, இஸ்ரோ விஞ்ஞானி காளிமுத்து அறிவுறுத்தினார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் நேற்று மாலை துவங்கியது. இஸ்ரோ முதுநிலை விஞ்ஞானி காளிமுத்து பேசியதாவது:
"சிந்தனைகளை உடனுக்குடன் வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்துபவர்கள் குழந்தை விஞ்ஞானிகள்; அவர்களை மாசுபடாத விஞ்ஞானிகள் என அழைக்கலாம். வளர்ந்ததும், அவர்களது சிந்தனையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துகள் கலந்து மாசுபட்டு விடும். கிராமப்புறங்களில் அறிவியல் இயக்கங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது சிறப்பானது.
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் சிந்தனைகளை அதிகரிக்கும் இதுபோன்ற மாநாடுகள் அவசியமானது. ஏன், எதற்கு என்ற குழந்தையின் கேள்வியில் அறிவியல் அடங்கியிருக்கிறது. அதை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்கும் மாணவர்களை புறக்கணிக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சரியான பதில் தந்து தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்களை ஊக்குவிக்கும்போது அவர்களது அறிவியலையும், அறிவையும் மேம்படுத்த முடிகிறது. எதிர்காலத்தில், அவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகின்றனர்." இவ்வாறு காளிமுத்து பேசினார்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளின் 210 ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் சமர்க்கப்படுகின்றன. ஒரு குழுவுக்கு ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியர் என ஆறு பேர் வீதம் 1,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆய்வு கட்டுரை குறித்து இன்று மாணவர்கள், விஞ்ஞானிகள் முன்னிலையில் பேசுகின்றனர்.
No comments:
Post a Comment