"சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரலுக்கு முன்னதாக மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம்" என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்து உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பெரிய பள்ளிகளில், டிசம்பர் முதல் ஜனவரிக்குள், மாணவர் சேர்க்கை முடிந்து விடுகிறது. "முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. மீறினால், நடவடிக்கை எடுப்போம்" என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மணி அடித்தாலும், பெரிய பள்ளிகள் அசருவதில்லை. இந்த ஆண்டும் பெரிய பள்ளிகளின் அத்துமீறல் வழக்கம் போல் ஆங்காங்கே துவங்கி விட்டது. இதையடுத்து, "வழக்கமான" எச்சரிக்கையை, கல்வித்துறை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை கூறியதாவது: ஏப்ரல், மே மாதத்தில் தான், மாணவர் சேர்க்கை பணிகளை துவங்க வேண்டும். சில பள்ளிகளில், முன்கூட்டியே பணிகள் துவங்குவதாக வரும் தகவலை அடுத்து, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம். "சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., மண்டல அதிகாரிகளுக்கும், கடிதம் அனுப்பி உள்ளோம்.
மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் 2ல் ஆரம்பித்து, மே மாத இறுதியில் முடிக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு, பிச்சை தெரிவித்தார்.
No comments:
Post a Comment