பள்ளியில் இருந்து மாணவர் நீக்கப்பட்டதை கண்டித்து, சக மாணவர்கள் முதுநிலை கண்காணிப்பாளரை, அறையில் சிறை வைத்து போராட்டம் நடத்தினர்.
மூணாறில் மலைவாழ் மக்களின் குழந்தைகள், படிப்பதற்கு கேரள அரசு சார்பில் முன் மாதிரியாக உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 5 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 213 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாங்குளம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கணேஷ்பினு, கடந்த டிச.,1ம் தேதி இரவு டிவி.,யில் செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது, விடுதியின் இரவுகாவலர், மின்சாரத்தை நிறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினரிடம், இரவு காவலர் புகார் செய்தார். பள்ளி உயர் அதிகாரி உத்தரவின்படி, முதுநிலை கண்காணிப்பாளர் ஜலஷா சாந்தி பால், நேற்று முன்தினம் மாணவர் கணேஷ்பினுவை பள்ளியில் இருந்து நீக்கினார். மாணவரிடம், நிர்வாகம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை என்றும், தலைமை ஆசிரியருக்கு தெரியாமல், மாணவனை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளனர் என்றும் மாணவர்கள் கூறினர்.
டிச.,11 ல், அரையாண்டு தேர்வு துவங்க உள்ளதால், மாணவனை பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும், என வலியுறுத்தி, நேற்று மாணவர்கள், முதுநிலை கண்காணிப்பாளரை, அறையில் சிறை வைத்து போராட்டம் நடத்தினர். காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம், நண்பகல் 2 மணி வரை நடந்தது. நீக்கப்பட்ட மாணவனை, பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் வரை, பல தொடர் போராட்டங்கள் நடத்தப்போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment