சென்னை மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை, "ராகிங்" செய்ததாக, 5 மாணவர்கள், ஓராண்டிற்கு கல்லூரியில் இருந்து, "சஸ்பெண்ட்" செய்யப்பட்டு உள்ளனர்; 12 பேர் விடுதியில் இருந்து, நிரந்தரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில், 700 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். முதலாம் ஆண்டில் மட்டும், 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான வகுப்புகள், அக்டோபரில் துவங்கியது. முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை, 2ம், 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், "ராகிங்" செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து, குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. இதில், மூத்த மாணவர்கள், "ராகிங்" செய்தது, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் என, 5 பேரையும், ஓராண்டு காலத்திற்கு, "சஸ்பெண்ட்" செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
மேலும், விடுதியில் தங்கி படிக்கும், 12 மாணவர்கள், நிரந்தரமாக விடுதியில் இருந்து வெளிற்றப்பட்டனர். நவ., 29 ல், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில், "ராகிங்" கொடுமை நடப்பதை தடுக்க, தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தின. மாணவர் சேர்க்கையின்போது, "ராகிங் செய்தால், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்" என, நிபந்தனை விதிக்கப்பட்டது. கல்லூரிகளிலும், "ராகிங்" கொடுமையை தடுக்க, பேராசிரியர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் மீறி, மருத்துவக் கல்லூரியில், "ராகிங்" கொடுமை நடந்துள்ளது, மாணவர் மற்றும் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "ராகிங் செய்தால், மாணவர்களுக்கு சிறை தண்டனை வழங்கவும், சட்டத்தில் இடம் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி, அத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்று, மாணவர்கள் ஈடுபட கூடாது. மற்ற கல்லூரிகளில், இதுபோன்ற புகார் வரவில்லை" என்றார்.
No comments:
Post a Comment