
தற்கால மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று அலுத்துக் கொண்டும் முயற்சி ஏதும் செய்யாமல் முடங்கி கிடக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் மாணவர் சவுந்தரராஜன் ‘‘இவன் வேற மாதிரி’’ என்று அனைவரும் வியக்கும் வகையில் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து வருகிறார்.
கையில் கரண்டியுடன் உடலெங்கும் சிமெண்ட் காரை படிய வியர்வை சிந்தி வேலை செய்து கொண்டிருந்த எம்.சி.ஏ. பட்டதாரியான சவுந்திரராஜனிடம் அவர் செய்யும் வேலை குறித்து கேட்ட போது சிரித்துக் கொண்டே அவர் கூறியதாவது:–
நான் சாதாரண ஏழை குடும்பத்து மாணவன். எனது அப்பாவின் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்துவதே மிகுந்த கஷ்டமான சூழ்நிலை நிலவிய போதும் எங்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. நான் 8–ம் வகுப்பு படிக்கும் போது தினசரி எங்கள் பகுதியில் இருந்து கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்களை பார்த்து எனது மனதில் ஓர் ஆசை வந்தது. நாமும் அவர்கள் போல் நாகரீகமாக உடை அணிந்து கல்லூரிக்கு சென்று வரவேண்டும் என்றும் கல்லூரி படிப்பை முடித்து உயர்ந்த பதவிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் நினைத்தேன்.
இந்த தீராத ஆசை என் மனதில் தீயாய் எரிந்தது. அதன் விளைவாக பல முறை நான் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை உருவான போதும் நான் மனம் தளராமல் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கட்டிட வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் எனது பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ்–2 முடித்தவுடன் எனக்கு எந்த படிப்பு படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்று வழி காட்ட யாரும் இல்லாத நிலையில் நானே முடிவெடுத்து பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படிக்க முடிவெடுத்து அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து அதிலும் வெற்றி பெற்றேன். எம்.சி.ஏ. படித்த நான் எனது சான்றிதழ்களுடன் கோயமுத்தூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை தேடி அலைந்தேன். அங்கு உள்ள நிறுவனங்களில் சில முன் அனுபவம் இல்லை என்று கூறியும், சிபாரிசு கடிதம் வேண்டும் என்று கூறியும் என்னை வேலைக்கு எடுக்க மறுத்தனர்.
இன்னும் சில நிறுவனங்கள் மிக சொற்ப சம்பளம் தருவதாகவும் என்னை அலைக்கழித்தனர். முடிவில் நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வினை எழுதி வெற்றி பெற முழு முனைப்பாக உள்ளேன். அதற்கான சிறப்பு வகுப்பிற்கு செல்லவும், எனது தம்பியின் படிப்பு செலவிற்கும் மற்றும் எனது குடும்பத்திற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் நான் பல ஆண்டுகளாக பகுதி நேரமாக செய்து வந்த கொத்தனார் வேலையை தற்போது முழு நேரமாக செய்து வருகிறேன். நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
10–ம் வகுப்பு படித்து விட்டு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று கூறிக்கொண்டு கைபேசியிலேயே காலத்தை வீணடிக்கும் ஒரு சில இளைஞர்கள் மத்தியில் சவுந்தரராஜன் ஓர் அதிசயமாய் இப்பகுதியில் பாராட்டப்பட்டு வருகிறார்.
No comments:
Post a Comment