தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71-ல் ‘வெயிட்டேஜ்‘ முறையும் பணி நியமனத்தின் போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பெண் விலக்கை எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும் போது இப்படி அனைவருக்கும் வழங்குவது சரி இல்லை என்றும், ‘வெயிட்டேஜ்‘ முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றும். சென்னை ஐகோர்ட்டிலும். மதுரை கிளையிலும் சிலரால் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஜகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது, இதைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு தரப்பில் நடத்தப்படும் அனைத்து வகையான தேர்வுகளிலும் இதே போன்ற மதிப்பெண் விலக்குகள் மற்றும் இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் இந்த முறை பின்பற்றப்படாத நிலை இருந்தபோது, தேர்வு எழுதக்கூடிய பல்வேறு இட ஒதுக்கீட்டு பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் ஏதேனும் ஒருவகையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி பிறகு அரசாணையாக வெளியிட்டது. அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டும், மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகிய இருவேறு அமர்வுகளின் கருத்துவேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதும், அந்த மனுவின் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment