தமிழகத்தில் கல்வியில் 69 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி உள்ளிட்ட சில மாணவ மாணவியர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக மருத்துவ கல்லுாரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 69 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைப்பதில்லை.
'கல்வியில் ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்' என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு இருந்தால் எங்களுக்கு இடம் கிடைத்திருக்கும். இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
எனவே தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பிறப்பிக்கப்பட்டது போல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான'பெஞ்ச்' முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment