சென்னை பல்கலையில், ஓர் ஆண்டாக சர்ச்சைக்குள்ளான, 22 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலை சிண்டிகேட் அனுமதி அளித்தது. இதையடுத்து, 20 பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர்ந்தனர்.
சென்னை பல்கலையில் காலியாக இருந்த, 22 பேராசிரியர் இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூனில் தேர்வு அறிவிப்பு வெளியானது. நேர்காணல், கடந்த டிசம்பரில் நடந்தது. ஐந்து பேராசிரியர்கள் தேர்வான நிலையில், 'விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை' என, பேராசிரியர் சங்கம் உள்ளிட்ட சில ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கால், பேராசிரியர் நேர்காணலுக்கு தடை விதிக்கப்பட்டது. பின், சென்னை பல்கலை நிர்வாகம் சார்பில், கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டு, தடை விலக்கப்பட்டது. மீண்டும் நியமன நடவடிக்கை துவங்கியது.ஆனால், தமிழகத்திற்குள் இந்தி வரக்கூடாது என்று, இந்தி பேராசிரியர் இடம்; காவிரி பிரச்னை உள்ளதால், கன்னட பேராசிரியர் இடம்; கிருஷ்ணா நீர் பிரச்னை உள்ளதால் தெலுங்கு பேராசிரியர் இடத்தை நிரப்பக்கூடாது என பேராசிரியர்களில், ஒரு தரப்பினர் பிரச்னை எழுப்பினர்.
ஆனால், பேராசிரியர் நியமனத்தில் காலம் தாழ்த்தக் கூடாது என்று, உயர்கல்வி அமைச்சகம் எச்சரித்ததால், கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், அவசரமாக நேர்காணல் நடந்தது.பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், நேற்று கூடி, 20 பேராசிரியர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் நேற்று காலையே பணியில் சேர்ந்தனர்.சில தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்தவர்கள் பணியிலிருந்து விடுவித்து வர சென்னை பல்கலை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment