அலுவலக பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு கொண்டு வந்த அரசாணையை உயர் அதிகாரிகள் மீறுவதால், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதில் 4.8 லட்சம் பேர் பெண்கள். வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த மசோதா வுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் கையெழுத்திட் டார். எனவே, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், மத்திய அரசின் இந்த சட்டத்தை மாநில அரசுகளோ, மத்திய அரசுகளோ கடைபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியான விஷயம்.
அந்த மசோதாவில், அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களை மாலை 6 மணிக்கு மேல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. பெண் ஊழியர்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரிக்க, பெண் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் துறைகளில் இந்த ஆணை பின்பற்றப்படுவதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. அரசாணையை மீறி, பல அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலால் மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அரசு பெண் ஊழியர்கள் சமீபகாலமாக பல இன்னல்களை சந்திப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு பெண் ஊழியர்கள் கூறியதாவது: ஒரு சில அதிகாரிகள் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். இதை எதிர்க்கும் பெண்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து பல பெண்கள் இதை வெளியே சொல்வதில்லை. சமீபத்தில் கூட, மாநகராட்சி மண்டலம் 11ல் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், மண்டல குழு அதிகாரியால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க, பெண் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என அரசாணையில் உள்ளது. ஆனால், குழுவில் ஆண் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இதனால் எங்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த அரசாணையை மாநில அரசு முழுமையாக அமல்படுத்தி, பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment