ஆர்.எஸ்.எஸ். வகுத்து அளித்துள்ள புதிய கல்வி முறையை மத்திய அரசு புகுத்தக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்தப் புதிய கொள்கைகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயல்படும் "பாரதிய ஷிக்ஸான் மண்டல்' என்ற அமைப்பு மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரைகள் ஆகும்.
இந்தியாவில் கோத்தாரி கல்வி ஆணையம் 1966-இல் வகுத்து அளித்த 10+2+3 என்ற கல்வி முறைதான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, பள்ளிக் கல்வி 10 ஆண்டுகள், மேற்சான்றிதழ் கல்வி 2 ஆண்டுகள், பட்டப்படிப்புக் கல்வி 3 ஆண்டுகள் என்ற முறையாகும்.
ஆனால், பி.எம்.எஸ். அளித்துள்ள அறிக்கையின்படி 8+4+3 என்று முறைசார் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வியில் 8 ஆண்டுகள் தாய்மொழியுடன் கூடுதலாக ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்க வேண்டும்.
அடுத்த 4 ஆண்டுகள் செவ்வியல் மொழிகளான சம்ஸ்கிருதம், அரபி, கிரீஸ், லத்தீன், ஹிப்ரு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்று வருகிறது.
சம்ஸ்கிருத மொழியை வலிந்து திணிப்பதற்காகவே இந்தத் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பு தயாரித்து இருக்கிறது. மத்திய அரசு கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய கல்வி முறையைச் செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றார் வைகோ.
No comments:
Post a Comment