மத்திய அரசு இழுத்தடிப்பதால் தமிழகத்தில் 40 மாதங்களாக சம்பளம் இன்றி மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்ட (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) சிறப்பாசிரியர்கள் தவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் நலனிற்காக தமிழகத்தில் 1988 ல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறையில் இருந்தது. இத்திட்ட சிறப்பாசிரியர்களுக்கு என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் சம்பளம் வழங்கப்பட்டது. சம்பளத்தில் முறைகேடு நடப்பதாக எழுந்த சர்ச்சையால் 2009 முதல் பள்ளி கல்வித்துறையின் கீழ் திட்டம் கொண்டுவரப்பட்டது.
7965 மாணவர்களுக்கு 202 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மத்திய அரசின் பாராமுகத்தால் மனிதவள மேம்பாட்டு துறையால் 2011 முதல் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 2011-12 முதல் 2013 -14 வரை கல்வியாண்டிற்கான சம்பளம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.
கற்றல், கற்பித்தல் திட்டங்களுக்காக தனியார் அமைப்புகள், முன்னாள் மாணவர்களின் நன்கொடைகள் மூலம் திட்டம் செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கான நிதியும் நான்கரை ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் உரிய உபகரணங்கள் இன்றி அவர்கள் கற்கும் நிலையுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: நாங்கள் சிறப்பு எம்.எட்., முடித்து பணியில் சேர்ந்தோம். முதலில் பார்வையில்லா மாணவர்களுக்காக மட்டும் பணி நியமனம் பெற்றோம். பின் அனைத்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் கற்பித்தல் பணி மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு 2011 முதல் 2014 வரை சம்பளம் வழங்கவில்லை. பலர் திட்டத்தில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளோம்" என்றனர்.
திட்ட பள்ளிக் கல்வி துணை இயக்குனர் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.,) மனோகரன் கூறியதாவது: சமீபத்தில்தான் பொறுப்பேற்றேன். இது மத்திய அரசின் திட்டம். 2013-14ம் ஆண்டு சம்பளத்திற்கான நிதி மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. மாதம் ரூ.26,500 சம்பளம் ஆகும். இதற்கான சிறப்பு அரசாணை ஏற்படுத்தப்பட்டு முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் சிறப்பாசிரியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும். 2011 முதல் 2013 வரை அவர்கள் சம்பளம் வழங்கப்படுமா என தெரியவில்லை, என்றார்.
1 comment:
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை இணையதளத்தில் இத்திட்ட த்திற்கு 12கோடி 22இலட்சம் தமிழக அரசிற்கு வழங்க ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொகை எங்கே தடைபட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் ஆய்ந்து விரைவில் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்
Post a Comment