ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள் என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ற கருத்தை நீங்கள் உடைக்க வேண்டும்.
அதற்கு, கனவு காணுங்கள்; என் பெற்றோர், நான் அனுபவித்த கஷ்டங்களை, என் குழந்தைகள் பெறக்கூடாது என்ற கனவு காணுங்கள். உங்கள் பலவீனம், சோம்பேறித்தனம்.
அதிகாலை, 4:00 மணிக்கு எழுபவன் ஞானி; 5:00 மணிக்கு எழுபவன் நல்ல மாணவன்; 6:00 மணிக்கு எழுபவன் சுமாரான மாணவன்; 7:00 மணிக்கு எழுபவன் எருமை; 8:00 மணிக்கு எழுபவன் காட்டெருமை. அதனால், வாழ்க்கையில் வெற்றிபெற தூக்கத்தை தூக்கி எறிந்து, விழிப்புடன் செயல்படுங்கள்.
ஒருநாள், விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணா பரமஹம்சர், கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சீடர், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு செய்ய இருந்த பூந்தியை, கூட்டம் கூட்டமாக எறும்புகள் சாப்பிடுகின்றன, என்ன செய்வது? என்றார்.
அப்போது அவர், அந்த பூந்தி குவியலை சுற்றி, இரண்டு அடி தள்ளி, சர்க்கரையை தூவி விட்டு, லட்டு செய்யுங்கள் என்றார். எறும்புகளும் சர்க்கரையை சாப்பிட்டு விட்டு திரும்பி சென்றன.
அதன் பின் சீடர்களிடம் பேசும்போது, பிரசாதம் என்ற இலக்கை தேடி எறும்புகள் வந்தன. சர்க்கரை என்ற ஆசையை, அதற்கு நான் காட்டினேன். ஆசைக்கு அடிபட்டு சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு, எந்த எறும்பும் பிரசாதம் என்ற இலக்கை அடையவில்லை. நீங்களும், ஆசைக்கு அடிபட்டு இலக்கை இழந்து விடாதீர்கள் என்றார். பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆசிர்வாதம் நமக்கு மிக மிக முக்கியம். அவர்கள் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment