அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும்படி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம்: சென்னை, புரசைவாக்கத்தில், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும், தனியார் பள்ளி. நிர்வாகத்துக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே, பிரச்னை இருந்து வந்தது. கடந்த 2011, செப்டம்பரில், போராட்டத்தில் ஈடுபடுமாறு, மாணவர்கள் தூண்டி விடப்பட்டனர். இதனால், பள்ளி கல்வி இணை இயக்குனர், தலைமை கல்வி அதிகாரி, பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
2012, பிப்ரவரியில், பள்ளி வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த, ஊழியர்கள் முடிவு செய்தனர். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பள்ளி நிர்வாகம் மனு தாக்கல் செய்து, இடைக்கால உத்தரவு பெற்றது. அதைத் தொடர்ந்து, நிர்வாகத்தை புறக்கணித்து விட்டு, ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், நேரடியாக சம்பளம் வழங்க, மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
அதன்பின், கடந்த ஆண்டு, அக்டோபரில், பள்ளியை, மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் அளித்த அறிக்கையை ஏற்று, ஊழியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்குவதை வாபஸ் பெற பரிந்துரைத்தார். ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல், மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரை அளித்தார் எனக்கூறி, அதை, தலைமை கல்வி அதிகாரி நிராகரித்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளியின் தாளாளர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டப்படி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளியின் செயலரிடம்தான் வழங்க வேண்டும். சில சிறப்பு தேர்வுகளில், விதிவிலக்காக, ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கலாம்.
உரிமை உள்ளது: சம்பளம் வழங்க ஒப்புதல் வழங்கும், மாவட்ட கல்வி அதிகாரி, நேரடியாக சம்பளம் வழங்க வேண்டியதில்லை என்பதில், திருப்தி அடைந்துள்ளார். ஆனால், சங்க நிர்வாகிகளுக்கு உரிமை உள்ளது என்ற ரீதியில், மேல் அதிகாரி தவறு செய்துள்ளார். தங்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்களும், ஊழியர்களும் ஒருபோதும் குறைபட்டு கொண்டதில்லை.
எனவே, நேரடியாக சம்பளம் வழங்க பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மானியங்களை, பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment