ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன், தாட்கோ மேலாண்மை இயக்குநர் ஆ.சுகந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் எஸ். சிவசண்முகராஜா, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் பு.செ.அர்ச்சனா கல்யாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: 2014-15ம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ^1998.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததில் இதுவரை ^554.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் மாணவ- மாணவிகள் முழுநேரம் தங்குவதை உறுதி செய்ய வும், உணவுகள் சிறப்பாக வழங்க வேண்டும். விடுதிகள், பள்ளிகள் இயங்கும் கட்டிடங்களை முறையாக பராமரிப்பது, தடையில்லாமல் குடிதண்ணீர் கிடைப்பது, கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014-15ம் ஆண்டிற்குரிய சுமார் ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை விரைவில் கிடைக்க, கல்வி நிறுவனங்கள் மாணவ - மாணவிகள் பற்றிய தகவல்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
No comments:
Post a Comment