வார இறுதி நாள் விடுமுறை, அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி நடத்தக் கூடாது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் எருமப்பட்டி வட்டாரக் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அலங்காநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளி முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை முறையின் கீழ் இணையதளத்தில் மாணவர்களின் விவரம், பள்ளியின் விவரம், ஆசிரியர்களின் விவரம், ஆதார் அடையாள அட்டை விவரங்களை பதிவு செய்வது, மாணவர்களின் புகைப்படத்தை சேகரித்து, தனிக்குறியீடு எண்ணை கோப்பு எண்ணாகப் பயன்படுத்தி குறுந்தகடு தயாரித்து அளிப்பது, அளிக்கப்பட்ட விவரங்களை மீண்டும் சரிபார்த்து அளிப்பது போன்ற கூடுதல் பணிகளை பள்ளித் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர்களுக்கு அளிப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும்.
தனியார் இணையதள மையங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளுக்கு செலவினத் தொகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாள்களில் பணியிடை பயிற்சி வகுப்புகள், பள்ளிக் கல்விசார் பணிகளைக் கட்டாயப்படுத்தி அளிப்பதைக் கைவிட வேண்டும்.
அவ்வாறு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு ஈடு செய் விடுப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வருகைச் சான்று வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment