ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியும், தமிழ்நாடு ஐசிடி அகாதெமியும் இணைந்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு வளர்ப்பு குறித்தும், ஆசிரியர்களுக்கு கணிப்பொறித் திறனை மேம்படுத்துதல் குறித்தும் கருத்துப் பட்டறையை அண்மையில் நடத்தின.
இதற்கான தொடக்க விழாவில், சென்னை ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் என். துவாரகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது:
கல்லூரிகள், பள்ளிகளின் பாடத் திட்டத்துக்கும், தொழில்நுட்பத் துறையின் தற்போதைய முன்னேற்றத்துக்கும் நீண்ட இடைவெளி உள்ளது.
இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக கருத்துப் பட்டறைகள் அமைகின்றன. தற்போதைய சூழ்நிலையில் ஆங்கில மொழித் திறனும், கருத்துகளை வெளிப்படுத்தும் திறனும் இன்றியமையாதனவாக உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலுக்கேற்ப ஆசிரியர்களும் தங்களது திறன்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு ஐசிடி அகாதெமியின் முதுநிலை மேலாளர் ஜி. சரவணன் பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில்தான் பள்ளி ஆசிரியர்களுக்காக, கணிப்பொறித் திறன் மேம்பாடு குறித்து ஐசிடி அகாதெமி மூலம் கருத்துப் பட்டறை நடத்தப்படுகிறது. இதை ஆசிரியர்கள் பயன்படுத்தி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.
முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேசன் செயலாளர் பேராசிரியர் கே. குணசேகரன் பேசியது: தலைமைப் பண்பு என்பது குறிக்கோள்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் திறமை ஆகும்.
இன்றைக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்றோடொன்று தொடர்புடைய பல காரணிகள் பள்ளிகளில் ஆசிரியர்களின் தலைமைப் பண்பின் தேவைக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. பள்ளிகளின் முதல்வர்கள் இன்றைக்கு தொலைநோக்குப் பார்வையுடையவர்களாக, திறமையான நிர்வாகிகளாக, வழிகாட்டும் தலைவர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
சென்ற நூற்றாண்டு மாணவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கும் இந்த நூற்றாட்டின் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப வளர்ச்சியின் சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment