அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் அறிவியல் ஆய்வகங்களுக்கு தரமில்லாத ஆய்வக கருவிகள் வழங்கப்படுவதாக தலைமை ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் 2009 முதல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 7,000 பள்ளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் ரூ.25 ஆயிரத்திற்கு ஆய்வக கருவிகளும், ஐந்தாயிரம் ரூபாயில் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட வேண்டும். மீதமுள்ள ரூ.20 ஆயிரத்தில் தளவாட சாமான்கள் தொலைபேசி, இன்டர்நெட் கட்டணம், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வக கருவிகளை சில குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வாங்க வேண்டுமென தலைமை ஆசிரிகளை ஆர்.எம்.எஸ்.ஏ., அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால், அவர்கள் குறிப்பிடும் நிறுவனங்களில் மட்டுமே தலைமை ஆசிரியர்கள் ஆய்வக கருவிகளை வாங்கி வருகின்றனர். அந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட பெரும்பாலான ஆய்வக கருவிகள் தரமில்லாமல் உள்ளன.
தவிர, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே மாதிரியான பொருட்களே வழங்கப்படுகின்றன. இதனால், அவை அனைத்தும் பள்ளி ஆய்வக கூடங்களிலே பயன்பாடின்றி குவிந்து உள்ளன. ஆனால், தேவையான சில பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment