சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம் அருகே சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு சாலையில், எறும்பூர் கிராமம் அருகே, பார்சல் பண்டல்கள் கிடந்துள்ளன. அவ்வழியே சென்ற நபர்கள் பண்டல்களை பிரித்து பார்த்தனர். அதில், வேலூர் மாவட்டம், காட்பாடி தேர்வு மையத்தில் எழுதிய, அண்ணாமலை பல்கலை கழக தேர்வு விடைத்தாள்கள் இருந்தன.
உடன், விடைத்தாள் பண்டலை விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு எடுத்து சென்றபோது, தவறி விழுந்தது தெரியவந்தது.
மேலும், சேத்தியாதோப்பு போலீஸ் ஸ்டேஷனில் மற்றொரு விடைத்தாள் பண்டலை, அப்பகுதியினர் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. விடைத்தாள் பண்டல்கள், தனியார் கூரியர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதா, அல்லது ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்.,) மூலம் விருத்தாசலம் வந்து, அங்கிருந்து வேனில் எடுத்துச் செல்லப்பட்டதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த மார்ச், 28ம் தேதி, ஆர்.எம்.எஸ்., மூலம், பட்டுக்கோட்டைக்கு ரயிலில் சென்ற, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சிதறியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, பள்ளி மற்றும் பல்கலைக்கழக விடைத்தாள்கள் அலட்சியமாக சாலையில் கிடக்கும் சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment