தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின்கீழ் இயங்கும், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் தேர்வு மையங்களில், மொபைல் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆரிப் முகமது. இவர், உள்ளிட்ட 10 மாணவர்கள், கடந்த பிப்ரவரியில் நடந்த எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு எழுத்துத்தேர்வில், ப்ளூ டூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மொபைல்போன் மூலம் காப்பி அடித்ததாக புகார் எழுந்தது. இதற்கு நம்பும்படியான ஆதாரங்கள் கிடைத்ததால், இவர்களின் தேர்வு முடிவை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
இதுதொடர்பாக, ஆரிப் முகமது சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் மீது பல்கலை நிர்வாகம், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணை அறிக்கை ஒரு வாரத்திற்குள் பெறப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறியதாவது: சைபர் கிரைம் போலீசாரின் அறிக்கை வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, தேர்வு ஒழுங்குமுறை குழுவின் மூலம் உரிய தண்டனை தரப்படும்.
தேர்வுகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க, மருத்துவப் பல்கலையின்கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் தேர்வு மையங்களில், மொபைல் ஜாமர் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, அலோபதி, பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மற்றும் துணை மருத்துவப் படிப்புகள் ஆகிய பிரிவுகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு பொருந்தும். அடுத்த ஓராண்டிற்குள், அனைத்து கல்லூரிகளிலும், மொபைல் ஜாமர் கருவிகள் பொருத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மயில்வாகனன் நடராஜன் கூறினார்.
No comments:
Post a Comment