பக்கத்துக்கு பக்கம் வண்ண கலரில், மாணவர்களை
கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முப்பருவ முறை பாடத்திட்ட புத்தகங்கள்,
ஜூன் 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
ஜூன்
முதல் பள்ளி கல்வி துறையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை கல்வி
திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி மூன்று பருவங்களுக்கான
பாடத்திட்டங்களில் தற்போது முதல் பருவத்துக்கான (ஜூன் முதல் செப்.,வரை) பாட
புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இப்புத்தகங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள்
உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 8ம் வகுப்புக்கு 180
பக்கங்கள் கொண்ட தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், 300 பக்கங்கள் கொண்ட
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்கள், ஒரு புத்தகமாகவும்
பிரித்து, இரண்டு புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளன.
பழைய திட்டத்தில் உள்ளதுபோல், மாணவர்கள்
அனைத்து புத்தகங்களையும் பள்ளிக்கு சுமந்து செல்ல தேவையில்லை. முதல்
பருவத்தில் மாணவர்கள் இந்த 2 புத்தகங்களை மட்டும் பள்ளிக்கு கொண்டு
சென்றால் போதுமானது. புத்தகங்களில் பக்கத்துக்கு பக்கம் கண்களையும்,
மாணவர்களை கவரும் வகையிலும் கலர் படங்கள், ஓவியம், வரைபடம் இடம்பெற்றுள்ளன.
எழுத்துக்களும் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன.
குறிப்பாக 8ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில்
"செம்மொழி மாநாட்டு சிறப்புகள்" என்ற பாடம் மாற்றப்பட்டு, "தமிழ் வளர்த்த
சான்றோர்கள்" என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செம்மொழி
மாநாட்டு திருவள்ளுவர் படத்துடன் கூடிய கடைசி அட்டை படம் மாற்றப்பட்டு வண்ண
கலரில் அட்டைகள் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற மாற்றங்கள், குறைந்த பாடங்களை
எளிதாக படித்துவிட முடியும் என்று மாணவர்களுக்கு மனரீதியான ஒரு மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
முன்புபோல் முழு ஆண்டு தேர்வுக்கு அனைத்து
பாடங்களையும் படிக்கவேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் இல்லை. மாணவர்கள்
இதை வரவேற்பதுடன் பருவ முறையாக பிரிக்கப்பட்டு பாடத்திட்டங்களால் ஒருவித
தேர்வு பயம் மாணவர்களுக்கு அகலும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தக சுமை குறைந்து, மாணவர்களின் பொது அறிவை வளர்த்து, சிந்தித்து
விடையளிக்கும் திறனை வளர்க்கும் வகையில் இக்கல்வி முறை அமையும் என்பது
கல்வியாளர்களின் கருத்து.
No comments:
Post a Comment