கல்வியைப் பாதியிலேயே கைவிட்டவர்கள், அதை மீண்டும் தொடரும் வகையிலான புதிய திட்டம் இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதன்கிழமை தெரிவித்தார்.
ஜெனீவாவைச் சேர்ந்த உலகப் பொருளாதார அறக்கட்டளை, இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
முதல்கட்டமாக, 9-ஆம் வகுப்பிலிருந்து தொடங்கி, ஜனவரி மாதத்துக்குள்ளாக முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்புகள் வரை இது நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தை கட்டுப்பாடின்றி செயல்படுத்த மத்திய பல்கலைக்கழகங்களும்அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் கல்வியைப் பாதியில் நிறுத்தியிருந்தாலும், வேறு மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களிலும் சேர்ந்து மீண்டும் அதைத் தொடர முடியும்.
குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலர் கல்வியைக் கைவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் மீண்டும் தங்களின் கல்வியைத் தொடர விரும்பும்போது அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளன. அவ்வாறானவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைப்பேசி மூலம் மாணவர்களைக் கண்காணிக்க வசதி: பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கைப்பேசி மூலமாகவே பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையிலான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
No comments:
Post a Comment