இந்தியாவில், அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி சேர்க்கைப் பெறுவதில், தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது. மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி குறித்தான தற்காலிக சர்வேயில்(2012-13) இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், தமிழகத்தைவிட, யூனியன் பிரதேசங்களான சண்டிகரும்(51.3 GER), புதுச்சேரியும்(42.1 GER), முறையே, முதல் 2 இடங்களை வகிக்கின்றன. தமிழகத்தின் பங்கு 41.0.
Gross Enrolment Ratioஎனப்படும் GER, 18-23 வயது வரையிலான மொத்த மக்கள்தொகையில், கல்லூரி மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று பாகுபடுத்தி கணக்கிடப்படுவதாகும்.
இப்பட்டியலில், நான்காவது இடத்தில்(38.5 GER) டில்லி வருகிறது. அதற்கடுத்த இடங்களில், உத்ரகாண்ட்(33.1 GER), மணிப்பூர்(30.3 GER) மற்றும் டாமன் அன்ட் டயூ போன்றவை வருகின்றன.
மோசமான GER பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பார்த்தால், தாதர் நாகர்ஹவேலி(6.3 GER), ஜார்க்கண்ட்(10.1 GER), பீகார்(11.2 GER), சத்தீஷ்கர்(11.8 GER) லட்சத்தீவுகள்(11.8 GER) மற்றும் அசாம்(12.8 GER) ஆகியவை.
ஒட்டுமொத்த தேசிய சராசரி 21.1 GER. அவர்களில், ஆண்கள் விகிதம் 22.3 GER மற்றும் பெண்களின் விகிதம் 19.8 GER.
நாட்டிலுள்ள ஆசிரியர் எண்ணிக்கையில், பெண்களின் பங்கு 39% மட்டுமே. 100 ஆண் ஆசிரியர்கள் இருந்தால், அங்கே, 64 பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நாட்டின் 665 பல்கலைகள், 35,829 கல்லூரிகள் மற்றும் 11,443 சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த சர்வேயில் அடக்கம்.
ஆன்லைன் அடிப்படையில் இந்த சர்வேயை மேற்கொண்ட மத்திய மனிதவள அமைச்சகம், http://aishe.gov.in என்ற ஒரு போர்டலையும் உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment