மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இத்தேர்வில் ஈடுபாடு காண்பிப்பதில்லை என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வில், 3055 மாணவர்களே பங்கேற்றனர். மத்திய அரசு, நாடு முழுவதும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வின், முதல் கட்ட தேர்வு, மாநிலம் முழுவதும் 350 தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்வில், பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களே ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வு குறித்த போதிய விழிப்புணர்வு, பயிற்சிக் குறைவால் அரசு பள்ளி மாணவர்கள் முற்றிலும் இத்தேர்வை புறக்கணிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான பள்ளிகள் இத்தேர்வில் ஆர்வம் காண்பிப்பதில்லை. இதனால், திறமைகள் இருந்தும் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதும் நிலையில், தேசிய திறனாய்வு தேர்வில் வெறும் 3055 மாணவர்களே பங்கேற்றுள்ளனர். மொத்தமுள்ள 400 பள்ளிகளில், 195 பள்ளிகளிலிருந்து, பள்ளிக்கு இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள், 70 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண்களை அள்ளிச்செல்லும் நிலையில், இதுபோன்ற திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்க தயக்கம் காண்பிப்பது ஏன்? என்பது கேள்விக்குறியே. மேலும், ஆன்-லைன் முறையில், பள்ளிகள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்பதால், பள்ளி நிர்வாகங்கள் போதிய கவனம் செலுத்தாததால், திறமைமிக்க மாணவர்களும் விண்ணப்பிக்க இயலாமல் போனது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "தேசிய திறனாய்வு தேர்வு குறித்து கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கோவையில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகள், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரித்து பயிற்சிகள் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்படும்" என்றார்.
No comments:
Post a Comment