சேலம் அரசு கலைக்கல்லூரியில் காம்பவுண்டு சுவர் பல இடங்களில் இடிந்துள்ளதால் வெளியாட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்களில் பலரும் முதலாம் ஆண்டு மாணவியரை தொந்தரவு செய்வதாலும், இரவு நேரங்களில் மது அருந்துவோரின் புகழிடமாக இருப்பதாலும் மாணவ மாணவியருக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசினர் இருபாலர் கலைக்கல்லூரியில் காலை மற்றும் மதியம் என இரு ஷிப்டுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நடந்து முடிந்து ஜூலை 7ம் தேதி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கல்லூரியின் காம்பவுண்டு சுவர் பல இடங்களில் உடைந்திருப்பதாலும் உயரம் குறைவாக இருப்பதாலும் எவர் வேண்டுமானாலும் கல்லூரிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் மாலை 5 மணிக்கே வெளியாட்கள் ஏராளமானோர் கல்லூரிக்குள் வந்துவிடுகின்றனர். இதில் படித்து முடித்துவிட்டு வெளியில் சென்ற முன்னாள் மாணவர்களும் அதிக அளவில் உள்ளனர்.
இவர்கள் கல்லூரி வளாகத்தில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு முதலாம் ஆண்டு மாணவியரை டீஸ் செய்யும் நிலை காணப்படுகிறது. இரவு நேரங்களிலும் வெளியாட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறிவருகிறது. இதனால் பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்கு வரும் மாணவியர் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு கலைக்கல்லூரி என்றாலே ராகிங் உள்ளிட்ட கொடுமை நடக்கும் இடம் என்ற எண்ணத்தை சில ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போக்கியுள்ளன. அதற்கேற்ப தண்டனை கடுமையாக இருக்கும் என்பதால் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் ராகிங், டீஸிங் உள்ளிட்டவைகளில் ஈடுபடுவதில்லை.
ஆனால் படித்து முடித்துவிட்டு வெளியே சென்ற முன்னாள் மாணவர்களும், வெளி நபர்களும், கல்லூரி வளாகத்துக்குள்ளேயே வந்து டீஸிங் உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
மேலும் காம்பவுண்டு சுவர் இடிந்திருப்பதால் மரவனேரி பிரதான சாலை பகுதியாகவும், செயின்ட் பால் பள்ளி பகுதியிலும் எந்நேரம் வேண்டுமானாலும் கல்லூரிக்குள் செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் பலரும் கல்லூரிக்குள் நுழைந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை வகுப்பறையிலேயே வீசிவிட்டு செல்கின்றனர்.
காலையில் வரும் மாணவ மாணவியரை உடைந்த மதுபாட்டில்கள் வரவேற்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவ மாணவியர் பாதுகாப்பில்லாத சூழல் காணப்படுகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன் இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment