வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.1.80 லட்சமாக இருந்து வந்தது. இதை 2012–13 நிதி ஆண்டில் அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ரூ.2 லட்சமாக உயர்த்தினார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசு நேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும். இதன் மூலம் சுமார் 2 கோடி பேர் பலன் அடைவார்கள்.
மூத்த குடிமக்களுக்கு சலுகை
இதே போன்று மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பும் உயர்த்தப்படுகிறது. இது ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக வெளியான பிற முக்கிய அறிவிப்புகள் வருமாறு:–
* ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடைய தனிநபர்களுக்கான வரி 10 சதவீதமாக நீடிக்கும்.
* ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு வருமான வரி 30 சதவீதமும் விதிக்கப்பட்டு வருவது தொடரும்.
சேமிப்புக்கு சலுகை
* சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது சேமிப்பினை ஊக்குவிக்கும் முடிவாக அமைந்துள்ளது.
* பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது. இது ரூ.1½ லட்சமாக உயர்த்தப்படுகிறது.
* வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதுவும் ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
* வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருமான வரி தீர்வு ஆணையம் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment