Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 15, 2013

    மறதியை அதிகரிக்கும் உணவு வகைகள்: ஆய்வில் தகவல்

    சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்" வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.

    இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

    இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது. இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன.

    பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செயற்கை இனிப்புகளை நாடுகின்றனர். அதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் எடை குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் உடலுக்கு வேறு பல தீங்குகள் ஏற்படுகின்றன. மூளை பாதிப்பு, செயல்பாட்டில் மந்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

    கனடாவில் உள்ள மான்டெரல் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஜங் புட்"களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.

    வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

    உப்பு மனிதனின், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் இயங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்புள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் அறிவாற்றல், சிந்தனைத்திறன், புத்திக் கூர்மை ஆகியவை பாதிக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிக உப்பை பயன்படுத்துபவருக்கும் உண்டாகும். இதனால் உப்பின் அளவை சிறுவயதிலிருந்தே குறைத்து உண்டு வர வேண்டும். வயதானவர்கள் உப்பை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நலம். அதிலும் சிறந்த உப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    உடலின் செயல்பாட்டுக்கும், தசை வளர்ச்சிக்கும் புரோட்டின் முக்கியம். இருப்பினும் பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான புரோட்டின் உணவுகளே உடலுக்கு நன்மை பயக்கும். செயற்கை புரோட்டின் உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளை செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி ஞாபக மறதியை அதிகரிக்கும்.

    அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது.

    உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது கொழுப்பு உணவுகள். முறையற்ற உணவுப்பழக்கத்தால் கொழுப்பு கூடுகிறது. உணவில் கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

    சோடா, குளிர்பானங்களை அதிகளவு அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஞாபக மறதியை அதிகரிக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான இனிப்புகள் உடலின் எடையை கூட்டும். அதிக குளிர்ச்சி மற்றும் சோடாவில் உள்ள ஆசிட் பற்கள், கிட்னியை பாதிக்கும். நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கி ஆஸ்துமா மற்றும் இதயநோய்கள் ஏற்படவும் வழிவகுக்கும். எலும்புகள் வலுவிழந்து போகும்.

    சோடாவில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சோடா அருந்துவதால் பசியின்மை, மந்தம் ஆகியவையும் ஏற்படும். இயற்கையான பழரசங்களை அருந்துவதே உடலுக்கு நன்மை. கண்ணைக் கவரும் வண்ணத்தில் கிடைக்கும் பானங்களால் தீமையே ஏற்படும்.

    நிகோடின் உணவு வகையைச் சேர்ந்தது இல்லை. இருப்பினும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், மூளையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவை நிகோடின் தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது.

    நிகோடின் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளை செயல்பாட்டை தடுக்கிறது. புகைபிடிப்பதால் உடலுக்கு தீமை மட்டுமே ஏற்படுகிறது. இருப்பினும் அதை தொடர்ந்து செய்வது, நமது உடலுக்கு நாமே தீ வைத்துக் கொள்வதற்கு சமம்.

    நவீன உலகில் மது அருந்துவது புது கலாசாரமாக மாறி விட்டது. இது மிகவும் அபாயகரமானது. மது அருந்துவதால் உடல் நலம் மட்டுல்லாது மனநலமும் பாதிக்கப்படும். மது அருந்துவது முதலில் கல்லீரலை பாதித்து, ஆயுட்காலத்தை குறைக்கிறது. மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பம், மறதி உண்டாகிறது. தெளிவான சிந்தனை பாதிக்கப்படுகிறது.

    அதிகம் மது அருந்துவோருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. பரிட்சயமான நபர்களின் பெயர், சொந்த பொருட்கள் கூட மறந்து விடும். மதுவை தொடர்ந்து அருந்துபவர்கள் தங்களது முடிவை தானே தேடிக் கொள்கின்றனர். மது அருந்துவோர் அதை விட்டுவிட்டால், புதுவாழ்வு பெற்றதாக அவர்களே உணர்வர்.

    No comments: