ராஜபாளையம் அருகே மோசடியாக பலருக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக தலைமையாசிரியர் மீது கோர்ட் உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் சதாசிவம், 66. இவர், ஊஞ்சாம்பட்டி தனியார் உயர்நிலைப்பள்ளியின் செயலராக உள்ளார். இந்தப் பள்ளியில் 2005 முதல் 2011 வரை ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தை சேர்ந்த சுப்பையா, 44, தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பின் சத்துணவு ஊழியரை தாக்கியதாக பிரச்னையில் சஸ்பெண்ட் ஆனார்.
சமீபத்தில், பள்ளிக்கு வந்தவர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ் நகல் கோரினர். பள்ளி நிர்வாகம் சோதித்தபோது அடிக்கட்டையில் குறிப்பிட்ட நபர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் இல்லை. விசாரணையில், தலைமையாசிரியராக இருந்த சுப்பையா, 32 பேருக்கு மோசடி மாற்றுச்சான்றிதழ் வழங்கியது தெரிந்தது.
இதுகுறித்து, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் கோர்ட்டில் பள்ளி செயலாளர் சதாசிவம், மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் அருணாசலம் உத்தரவுப்படி ராஜபாளையம் தெற்கு போலீசார் சுப்பையா மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment