"மாணவர்கள் தான் ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர்" என இடைநிலை கல்வி திட்ட, மாநில இணை இயக்குனர் நரேஷ் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் நடந்த, மண்டல அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி பணிமனையை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் தான், அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். 10,12 ம் வகுப்பு மாணவர்களின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது.
6 ம் வகுப்பு முதல் மாணவர்களை கண்காணித்தால், அவர்களின் கற்றல் திறனை அடையாளம் காண முடியும். தலைமை ஆசிரியர்கள், அதிக மார்க் பெறும் மாணவர்களை விட, குறைந்த மார்க் பெறுபவர்களை கவனித்து, அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மாணவர்களை, கல்வியில் முன்னேற செய்வது, நாட்டை முன்னேற செய்வதற்கு சமம்.
ஒரு பள்ளியில் ஒரு மாணவர் முதல் மார்க் பெறுவதை விட, அனைத்து மாணவர்களும் வெற்று பெறுவது தான் பெருமை. ஒரு மாணவரின் வெற்றிக்கு, அவனதுபெற்றோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாணவர்கள் தான், ஆசிரியர்களை அடையாளம் காண வைக்கின்றனர். பெற்றோரின் கனவுகளுக்கு வழி காட்டுபவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்" என்றார்.
விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment