பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில்,சர்வர் பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள், அதில் படிக்கும் மாணவ,மாணவியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்,தொகுக்கும் பணி ஆன்-லைனில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில், புதிதாக சேர்பவர்களின் விவரங்களை,அப்பள்ளி தலைமை ஆசிரியர், குறிப்பிட்ட தினத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே, 'யூசர்' ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இணையதளத்தின் சர்வர் எப்போதும், 'ஹேங்' ஆன நிலையில், இருப்பதால், ஒரு மாணவனின் விவரத்தை பதிவு செய்ய, பல மணி நேரம் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பள்ளி தலைமைல ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யும் பணியில், 30க்கும் மேற்பட்ட கேள்விகளும், பதில்களும் அடங்கியுள்ளது. இவற்றை நல்ல முறையில், வேகமாக செய்தாலே, ஒரு மாணவனுக்கு அரை மணி நேரமாவது ஆகும். ஆனால், சர்வர் பிஸியாக இருப்பதால், ஒரு மாணவனின் விவரத்தை ஏற்றுவதற்கு கூட, பல மணி நேரம் வரை, கம்ப்யூட்டர் முன் காத்திருக்க வேண்டியுள்ளது. கல்வித் துறையினரோ, 'இன்னும் முடிக்கவில்லையா?' என, டென்ஷனை அதிகப்படுத்துகின்றனர். இதில் கம்ப்யூட்டர் மற்றும் இணையதள இணைப்பு இல்லாத துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் நிலை பரிதாபம். அவர்கள் தனியார் இன்டர்நெட் சென்டர்களுக்கு சென்று,அங்கு தவம் கிடக்கின்றனர். இதற்காக சொந்தப்பணத்தை செலவிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையை சரி செய்ய வேண்டும் அல்லது எமிஸ் பதிவேற்றம் செய்ய, கால அவகாசம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment