அரசுப் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்க்க, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டணியின் மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முத்துசாமி சங்க நடவடிக்கைகள் குறித்தும், தீர்மானங்களை விளக்கியும் பேசினார். பொருளாளர் அலெக்சாண்டர் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
பிறகு, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சுயநிதி கல்வி நிறுவனங்கள் அரண்மனை கோட்டை போன்று இரும்புக் கதவுகளை அமைத்து கல்வி வளாகத்தை மூடிவிட்டு, பொதுத் தேர்வுகளை உள்ளே நடத்துகின்றனர். மாணவர்களை காப்பி அடிக்கவும், எழுதிவைத்து பார்த்து எழுதவும் அனுமதிக்கின்றனர். தேர்வு மேற்பார்வைக்கு செல்லும் அலுவலர்களை சரி செய்தும், ஏமாற்றியும் மாணவர்களைத் தேர்வு எழுத வைத்து நல்ல மதிப்பெண்கள் பெற வைக்கின்றனர். பறக்கும் படை அதிகாரிகளை பல இடங்களில் உள்ளே விடாமல் மிரட்டவும் செய்கின்றனர். அரசுப் பள்ளி மையங்களில் இத்தகைய தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை.
அரசுப் பள்ளிகளில் மட்டும் தேர்வு மையம்:
எனவே, முறைகேடுகளைத் தவிர்க்க, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளை முன்னேற்றுவதில் தனி அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் சுயநிதி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போதும், பிறகும், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்து பணம் சம்பாதிக்கும் அவற்றின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களை அங்கேயே பிளஸ் 2 பயிலவும் வாய்ப்பளிக்க வேண்டும்.
தனி இணையதளம்:
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்விக்கு என தனி இணையதளம் உருவாக்க வேண்டும்.
ஆன்-லைனில் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். முதலமைச்சரின் அறிவிப்பின்படி, அனைத்துக் குழந்தைகளுக்கும் 4 சீருடைகளை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment