ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா 5 பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. திட்டத்தை விரிவிப்படுத்த தொடக்கப் பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி திட்டம் கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளிலும் துவங்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்உள்ளன. கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 249 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 5,201 மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 92 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டது. இதில் 5,835 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். கோவையில் ஆங்கில வழிக்கல்வியில் கடந்த 2 ஆண்டுகளை விட, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு இதுவரை தனி ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. இதனால், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களே, கூடுதலாக ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
தமிழ்பாடம் நீங்கலாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை தமிழ்வழி, ஆங்கிலவழி என மாறி, மாறி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், 2 பிரிவிலும் முழுமையாக வகுப்புகள் நடத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6, 7 வகுப்புகளில் சில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் போதிய அனுபவம் இல்லாததால் ஆங்கில வழிக்கல்வி நடுநிலைப்பள்ளிகளில் தடுமாறுகிறது.பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கிலப் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு உதவுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இப்பயிற்சியினால், ஆசிரியர்களுக்கு ஆங்கில புலமை ஏற்படுவதில்லை என ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு ஆங்கில வழிக்கல்வி முழுமையாகசென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை சரிசெய்ய ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனி ஆசிரியர்கள் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என கல்விச்சங்கங்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கூறுகையில்,“ ஆங்கிலவழிக் கல்விக்கு தமிழக அரசு போதிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மேலும் 6, 7 வகுப்புகளில் உள்ள புத்தகத்தில் புதிய வார்த்தைகளால் ஆசிரியர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களுக்கு எடுத்து செல்ல முடிவதில்லை. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில பயிற்சியும் காலதாமதமாகிறது. இதனை தவிர்க்க, ஆங்கிலம் படித்த தனி பட்டதாரி ஆசிரியர்களை தமிழகஅரசு நியமிக்கவேண்டும்“, என்றார்.
1 comment:
Education department say excess teachers are working in the Ele. Edn.department.In6,7 STDs purely newly appointed BT trs only handling. Why they feel difficult?
Post a Comment