ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டாய வசூலில் ஈடுபட்டது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவரிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவரிடம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ராமசாமி 1,000 முதல் 1,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவரிடம் தலா 3,500 முதல் 7,500 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கட்டாய வசூல் தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நலச்சங்கம் சார்பில், புகார் மனு அனுப்பப்பட்டது.
அதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் நேற்று ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, பள்ளி தலைமையாசிரியர் மதியழகன், பி.டி.ஏ. நிர்வாகிகள் மற்றும் பணம் கொடுத்த பெற்றோர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பி.டி.ஏ. தலைவர் ராமசாமி கட்டாய வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் பி.டி.ஏ. தலைவர் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: பஞ்சாயத்து தலைவர் ராமசாமியின் அடாவடியால், பள்ளி மாணவரிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. அவர் பி.டி.ஏ. தலைவர் பதவியில் இருக்க தகுதியற்றவர். அவரின் பதவியை பறிக்க வேண்டும். பள்ளி மாணவரிடம் கட்டாயமாக வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் விசாரணையை முடித்துவிட்டு மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
மேலும் அவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் என்பதால் அவரை காப்பாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment