அரக்கோணம் வட்டத்தைச் சேர்ந்த 7 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக தமிழக அரசுக்குச் சென்ற புகாரை அடுத்து அப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டு, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணம் வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிலவற்றை குறிப்பிட்டு அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் வருமானத்தில் தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பு செய்து வருவதாகவும், தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், சார் கருவூலத்தில் பணிபுரியும் சிலர் இதற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் அரக்கோணம், பழனிப்பேட்டையைச் சேர்ந்தவர் ஒருவரின் பெயரில் புகார் கடிதம் தமிழக அரசுக்குச் சென்றது.
இக்கடிதத்தின் அடிப்படையில் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.சுப்பிரமணி, தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேடு, அரக்கோணம் சார் கருவூலத்தில் தாக்கல் செய்த ஊதிய பட்டியல், கருவூல உண்டியல் பட்டுவாடா பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வுக்கு எடுத்துவர உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மோசூர், முள்வாய், மூதூர், சித்தேரி, குருவராஜபேட்டை (பெண்கள்), கும்பினிபேட்டை, வளர்புரம் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வளர்புரம் பள்ளியின் ஆவணங்கள் மட்டுமே முறையாக இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது முதல்கட்ட ஆய்வு தான். அதனால் எதையும் உறுதியாக சொல்ல இயலாது என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment