பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், நேற்று மாலை விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட, 370 ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் வெள்ளி பதக்கம் ஆகியவற்றை, அமைச்சர் வழங்கினார்.
அமைச்சர் பேசுகையில், "கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்றார்.
சபிதா பேசுகையில், "அரசுப் பள்ளிகளில், ஆங்கில ழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.
சென்னை மாவட்ட கலெக்டர், சுந்தரவல்லி, தேசிய ஆசிரியர் நல நிதிக்காக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சரிடம் வழங்கினார். விழாவில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment