பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, இலவச காலணிகள், சென்னையில் இருந்து திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. இவை, இவ்வார இறுதியில் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு, தமிழக அரசு இலவச காலணி வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான மாணவர் எண்ணிக்கை குறித்து பட்டியலை, பள்ளிகளிடம் இருந்து கேட்டுப்பெற்ற கல்வித்துறை, ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திடம், கடந்த வாரம் காலணிகளை கொள்முதல் செய்தது.
இவை, சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில், 76 மாநகராட்சி பள்ளிகள், ஆறு அரசு உதவிபெறும் பள்ளிகள், இரண்டு ஆதிதிராவிடர் நல பள்ளிகள் என 84 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 154 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக 18 ஆயிரத்து 718 ஜோடி காலணிகள் அனுப்பப்பட்டன.
திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 89 நடுநிலைப் பள்ளிகளில், 19 ஆயிரத்து 212 பேர் படிக்கின்றனர். இவர்களுக்காக 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலணிகள் வந்துள்ளன. இவை, தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தெற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அழகர்சாமியிடம் கேட்டபோது, "நடப்பு ஆண்டுக்கு கேட்கப்பட்ட காலணிகள் முழுவதுமாக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் களிடம் ஒப்படைக்கப்படும். வார இறுதிக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment