சிவகங்கை அரசு கல்லூரியில் கல்வி பாதிக்காத வகையில் மாறுதலாகிச் சென்ற பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 11 இளநிலை, 10 முதுநிலை மற்றும் 5க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கான படிப்புகள் உள்ளன. 3,200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காலை ஷிப்டில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர பேராசிரியர்களும், மதிய ஷிப்டில் 60க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில் இக்கல்லூரியில் பணிபுரிந்த 17 பேராசிரியர்கள் மாறுதல் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அதே கவுன்சிலிங்கில் இக்கல்லூரிக்கு மாறுதல் பெறவில்லை என்ப தால்,பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள பேராசிரியர்களுக்கு கூடுதல் வகுப்பு எடுக்கும் நிலை உள்ளது. மேலும், தரம் உயர்த்தப்பட்டுள்ள இக்கல்லூரிக்கு நிரந்தர முதல்வரும் நியமிக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.
மாணவர்கள் கூறும்போது, "இக்கல்லூரியில் ஏற்கனவே ஆங்கிலம், தமிழ் போன்ற ஒரு சில துறைகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய சூழலில் 17 பேர் மாறுதல் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும், காலி யிடங்களை நிரப்ப அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
முதல்வர் ஜெகநாதன் கூறுகையில், "குடும்பச் சூழல் உள்ளிட்ட சில காரணத்திற்காக 15க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி கல்வி இயக்குனரக விதிமுறைகளுக்குட்பட்டு மாறுதல் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அதே கவுன்சிலிங்கில் சிவகங்கை கல்லூரியை தேர்வு செய்யாத நிலையில், சிலர் மேலூர் அரசு கல்லூரி காலியிடத்தை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி அடுத்த செமஸ்டருக்குள் காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறோம்" என்றார்.
No comments:
Post a Comment