"உயர்கல்வி வழங்கும் அரசு கல்லூரிகள், தொழிலதிபர்களுடன் ஒருங்கிணைந்து, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவது ஆசிரியர்களின் பொறுப்பு" என கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே கூறினார்.
பெங்களூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாணவருக்கும், தரமான கல்வி பெறுவதுடன், நல்ல வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக இருக்கும். இதை நிறைவேற்ற, ஆசிரியர்களின் உதவி அவசியம்.
வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல், மாணவர்களுக்கு நல்ல குணநலன்களை கற்றுத் தருவதிலும், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, மாணவர்கள் கல்வியாளர்களாக உயர்ந்தால் மட்டும் போதாது. நல்ல நடத்தை, பின்னணி இல்லாவிட்டால், சமுதாயத்தில் கவுரவம் கிடைக்காது.
கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசு தயாராக உள்ளது. கல்வி துறை பதவிகள், சி.இ.டி., மூலம் நிரப்பப்படும். தற்போது, 17 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்றனர். மேலும், 53 லட்சம் மாணவர்கள், உயர்கல்வியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுக்கும், கல்வி வழங்க, அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது.
வேலை வாய்ப்புக்கான போட்டி அதிகமாக உள்ளது. இதில் போட்டியிட, மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். அரசு கல்லூரிகளில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தொழில் அதிபர்களுடன் இணைந்து, வேலை வாய்ப்பு பெற்று தருவது, ஆசிரியர்களின் பொறுப்பாகும். அரசு கல்லூரிகளின் ஆய்வகக் கட்டணம், மாணவர்களுக்கு திரும்ப தரப்படும்.
அரசு கல்லூரிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது அரசின் கடமையாகும். இதுவரை கல்லூரிகளில் ஆய்வக கட்டணம் பெறப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல், மாணவர்களிடமிருந்து பெற்றுள்ள ஆய்வக கட்டணம் திருப்பி தரப்படும்.
No comments:
Post a Comment