'எபோலா' வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
லைபிரியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களையும் எபோலா வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதனால் ஆப்பிரிக்காவில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டன.
வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் வைரஸ் தாக்குதல் அதிகம் உள்ளதால் மற்ற நாடுகள் விழிப்புடன் இருக்க உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், எபோலா வைரஸ் நோய் தாக்கம் அதிகம் உள்ள 4 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியர்கள் அதிகம்பேர் உள்ளதாகவும், இவர்கள் மூலம் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைவதற்கான ஆபத்து உள்ளதாகவும், சுமார் 45,000 இந்தியர்கள் கினியா, லைபிரியா, சியரா லியோன் மற்றும் நஜீரியா ஆகிய நாடுகளில் தங்கியும், பணியாற்றியும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளில் எபோலா வைரஸால் நிலைமை மோசமானால், இவர்கள் இந்தியா திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறிய வர்தன், இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு மிகக்குறைந்த அளவுக்கே வாய்ப்புள்ளதாகவும், அப்படியே யாருக்காது அந்த நோய் தாக்கினாலும் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment