"சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா உரையை அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில், 2010ல் இருந்து நீதித்துறைக்கான இரண்டு ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு தரவில்லை என்று குற்றம்சாட்டிப்பட்டிருந்தது.நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, தமிழக அரசு நீதித்துறைக்கு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.675 கோடி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
தமி்ழ்நாட்டில் நீதித்துறை கட்டமைப்புகளை பலப்படுத்த மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதா, நடப்பாண்டில் புதிதாக 105 நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் உறுதியளித்தபடி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி, சுதந்திரமான நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
அரசியல் சட்டப்படி மாநில மொழிகளை நீதிமன்றங்களில் பயன்படுத்த வழி வகை உள்ளது என்றும் ஏற்கனவே 4 மாநிலங்களில் அந்தந்த தாய்மொழியில் வாதிடப்படுவதாகவும் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment