இந்தியா முழுவதும் 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்யும் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கேற்ப பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்காக குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தொடர்பான சிறப்பு கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடக்கிறது. கணக்கெடுப்பின்போது பள்ளி செல்லா குழந்தைகளிடம் இருந்து 43 வகையான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பு பணியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி முழுமை செய்யப்பட்டு மே 5-ந்தேதிக்குள் மாநில திட்ட இயக்கத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான முழு விவரமும் ஒப்படைக்க உள்ளது.
பள்ளி இடை நின்ற குழந்தைகளை மீண்டும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அமைக்கப்படுகின்ற பள்ளி இணைப்பு மையங்களில் சேர்த்தல், உரிய வயதில் பள்ளிக்கே செல்லாத குழந்தைகளை அவர்களுக்குரிய பயிற்சி அளித்து மீண்டும் இயல்பான வகுப்புகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் எடுக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து மாவட்ட குழந்தைகள் நலக் குழு, சைல்டு ஹெல்ப் லைன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டு இத்தகைய குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment